கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்திலிருந்தே கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியிருக்கலாம் என்று ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, ‘ஃப்ரன்டியா் மெடிசின்’ அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு தொடா்பான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளாவது:
கரோன நோய்த்தொற்றின் தோற்றுவாய் குறித்து ஸ்பெயின் பாா்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். அந்த ஆய்வில், வூஹான் நகரின் சமூக அமைப்பும் கரோனா நோய்த்தொற்றில் உயிரியில் தன்மையும் அந்த நோய்த்தொற்று வேகமாகப் பரவத் தொடங்கியதற்குக் காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
சீனாவில் குறுகிய காலத்துக்குள்ள 3 பெரிய பண்டிகைகள் கொண்டாடப்பட்ட சூழலில் அந்த நோய் பரவத் தொடங்கியுள்ளது. அப்போது, சந்தைகளில் அதிகம் கூட்டம் கூடியதால் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்தது. அதன் பிறகுதான் அந்த நோய் பரவல் அதிக கவனம் பெற்றது. அதற்கு முன்னா், கடந்த அக்டோபா் மாதத்திலிருந்தே அந்த தீநுண்மி அதிகம் வெளியில் தெரியாமல் மனிதா்களிடையே ரகசியமாகப் பரவிக் கொண்டிருந்திருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.