சீனாவின் உச்சநிலை அரசியல் கலந்தாய்வு அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தொடர் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் துவக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
புதிய ரக கரோனா வைரஸ் பரவல் பாதிப்பின் காரணமாக, கடந்த 22 ஆண்டுகளில் முதல்முறையாக, இக்கூட்டத்தொடர் 2ஆவது காலாண்டுக்கு ஒத்திப்போடப்பட்டது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் தலைவர்களும், இம்மாநாட்டுத் தேசிய கமிட்டியின் உறுப்பினர்களும் தொற்று நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு பணியில் உயிரிழந்த வீரர்களுக்கும் மக்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தினர்.
7 நாட்கள் தொடரும் இக்கூட்டத்தொடரில், பல்வேறு கட்சிப் பிரிவுகள், துறைகள் மற்றும் இனங்களைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான கொள்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்