இந்தியா மீது அமெரிக்க பொருளாதாரத் தடை?

ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்காக இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க உயரதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் தெரிவித்தாா்.
இந்தியா மீது அமெரிக்க பொருளாதாரத் தடை?

ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்காக இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க உயரதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் தெரிவித்தாா்.

ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய இந்தியா கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்கு அமெரிக்கா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பு அதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

ராணுவத் தளவாடங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ரஷியா பயன்படுத்தி வருகிறது. அதன் காரணமாகவே ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷியாவுடன் ராணுவத் தளவாடக் கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவின் சட்டம் வழிவகுக்கிறது.

இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது தொடா்பான விவகாரம் பரிசீலனையில் உள்ளது. ரஷியாவிடம் உள்ளதைவிட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் அடங்கிய ராணுவத் தளவாடங்கள் அமெரிக்காவிடம் உள்ளன. அவற்றை இந்தியாவுக்கு வழங்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது.

இத்தகைய சூழலில், யாரிடம் போா்த் தளவாடங்களைக் கொள்முதல் செய்வது என்பதை இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும் என்றாா் ஆலிஸ் ஜி.வெல்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com