வெளிப்புறச் சூழலின் மாற்றத்தை எதிர்கொண்டு, வெளிநாட்டுத் திறப்பு நிலையை உறுதியோடு விரிவாக்கி, தொழில் மற்றும் விநியோகச் சங்கிலியை நிலைப்படுத்தி, திறந்த கொள்கையின் மூலம் சீர்திருத்தங்களையும் வளர்ச்சியையும் தூண்ட வேண்டும் என்று 22ஆம் நாள் சீனாவின் தேசிய மக்கள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசுப் பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவைட்-19 தொற்று நோய், உலகப் பொருளாதார மற்றும் வர்த்தகத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை விரிவாக்கி, பலதரப்பு வாதங்களைக் கடைப்பிடிப்பது என்ற சீனாவின் சொல்லும் செயலும், உலகப் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு நம்பிக்கையை ஊட்டும்.
தற்போதுள்ள சூழலில், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடு குறைந்துள்ளதால், உலகளவில் நாடு கடந்த நேரடி முதலீடு கடும் வீழ்ச்சி நிலையில் சிக்கி உள்ளது. இந்த சவாலைச் சமாளிப்பதற்காக, சேவை வர்த்தகத்தின் புதுமையாக்க வளர்ச்சி குறித்த புதிய சுற்று முன்னோடிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல், 3ஆவது சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியை நடத்துவது, வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைப் பட்டியலை பெருமளவில் குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள், இந்த அரசுப் பணியறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொவைட்-19 தொற்று நோயால் பெரும் பாதிப்பை உலக நாடுகள் சந்தித்துள்ள இந்நிலையில் உலகின் தொழில் மற்றும் விநியோகச் சங்கிலியைக் காப்பதற்கு உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடான சீனா, வெளிநாட்டுத் திறப்புக் கொள்கைக்கு தொடர்ச்சியாக மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
40 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறையாக்கத்தின் மூலம் தெரிந்து கொண்ட உண்மை என்னவென்றால், திறந்த சூழலில்தான் பொருளாதாரம் வளர்ச்சி அடைய முடியும் என்பதாகும். இதைத் தெரிந்து கொண்ட சீனா, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு என்ற வழிமுறையைப் பயன்படுத்தி சிக்கல்களுக்கு தீர்வு கண்டு வருகிறது.
கொவைட்-19 தொற்று நோய் ஏற்பட்டக் காலத்திலும் சீனப் பொருளாதாரம், வலிமையான மீட்சித் திறனைக் கொண்டுள்ளது. குறிப்பாக தொற்று நோய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதலாவது காலாண்டில், சீனாவில் 3,360 கோடி அமெரிக்க டாலர் நேரடி அன்னிய முதலீடு செய்யப்பட்டது. சீன தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வின் படி, கிட்டத்தட்ட 40 விழுக்காட்டு வெளிநாட்டு நிறுவனங்கள், சீனாவில் தனது முதலீடுகளை அதிகரிக்கப் போவதாக தெரியவந்துள்ளது..
சீனாவில் முதலீடு செய்து தொழில் நடத்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நீண்டகால ஆர்வம் கொண்டுள்ளனர். இவ்வாண்டு அரசுப் பணியறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சீனா மேற்கொண்டு வரும் உறுதியான திறப்புக் கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்களின் நம்பிக்கை மேம்படும். சந்தைச் சீர்திருத்தத்தை தொடர்ந்து முன்னெடுத்தல், வெளிநாட்டு முதலீட்டுச் சட்டத்தை அமலாக்குதல், அமைப்புமுறை ரீதியிலான திறப்பு நிலையை முன்னேற்றுதல் ஆகியவற்றால் சீனாவின் பெரிய சந்தை மற்றும் உள்நாட்டுத் தேவை அதிகரிக்கும். இது உலகப் பொருளாதார மீட்சிக்கு உந்து சக்தியை ஏற்படுத்தும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்