முகநூலில் இட்ட தவறான பதிவுக்காக சிங்கப்பூரில் உள்ள ஒருவருக்கு 4 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஓட்டுநராக பணிபுரியும் ஒருவர் முகநூலில் தவறான பதிவு ஒன்றை இட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் அதனால் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
சுமார் 7,500 பேர் உள்ள முகநூல் குழுவில் பதிவிட்ட அவர் 15 நிமிடத்திற்கு பின் அந்தப் பதிவை நீக்கியுள்ளார். எனினும் அந்தப் பதிவை வைத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தற்போது சிங்கப்பூர் அரசு அவருக்கு 4 மாத சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
முன்னதாக சிங்கப்பூரில் ஊரடங்கு காலத்தில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பதிவிடுவோர், கரோனா வைரஸ் குறித்து மக்களிடையே வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.