சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து சென்ற நபரை நான்கு ஆண்டுகள் தண்டனைக்குப் பிறகு இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களிடம் பாகிஸ்தான் அரசு ஒப்படைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2016-ஆம் ஆண்டு உரிய ஆவணங்களின்றி சம்ஜெளதா விரைவு ரயில் மூலம் பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்திற்கு பன்வாசி லால் என்ற இந்திய நபர் சென்றுள்ளார்.
அங்கு பாகிஸ்தான் காவல்துறையினரின் விசாரணையில் தனது பெயர் முகமது அஸ்லாம் என்றும், தான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரிடம் இந்திய ரூபாய்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது உண்மையான பெயர் பன்வாசி லால் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
பயணத்திற்கான உரிய ஆவணங்களின்றி அவர் லாகூர் வந்தது குறித்து இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பின்னர் சட்ட விரோதமாக எல்லைத் தாண்டி வந்ததாக லாகூர் மத்திய சிறையில் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை முடிந்து பன்வாசியை இன்று (புதன்கிழமை) வாகா எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களிடம் பாகிஸ்தான் வீரர்கள் ஒப்படைத்தனர்.