மலேசியாவில் அகதிகளாக உள்ள பெண்கள் படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்கின்றனர். சமூகத்தில் யாருடைய தயவுமின்றி சுயமாக வாழும் வகையில், அவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அடிப்படைக் கல்வி கொடுக்கப்படுகிறது.
மலேசியாவில் அகதிகளாக உள்ள பெண்களுக்கு அடிப்படை கல்வியறிவினைக் கொடுக்கும் வகையில் கோலா லம்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் 'அகதிகளுக்கான பெண்கள்' என்ற குழு உருவாக்கப்பட்டது.
அரிஸ்சா ஜெமைமா, தவீனா தேவராஜன் ஆகிய இரண்டு சட்ட மாணவிகளால் இந்த குழு உருவாக்கப்பட்டது. இருவரின் தொடர் முயற்சியால் தற்போது இந்த குழுவில் 20 தன்னார்வலர்கள், அகதி பெண்களுக்கு பாடம் எடுக்க முன்வந்துள்ளனர். அவர்கள் மூலம் அகதிபெண்களுக்கு வாரம் இரண்டு மணிநேரம் ஆங்கில வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் மலேசிய தலைநகரில் கரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக அக்டோபர் மாத மத்தியிலிருந்து வகுப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிவரை பள்ளிகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அகதிகள் தங்கும் விடுதியிலுள்ள மூன்று மடிக்கணினிகளில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விடியோக்கள் மூலம் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. அவர்களது குழந்தைகளுக்கு வாரமொருமுறை இணையதள வகுப்புகள் மூலம் தொடர்ந்து பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.