அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிஜ கிறிஸ்துமஸ் மரங்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது.
அமெரிக்கர்களில் 75 முதல் 80 சதவிகிதம் பேர் வழக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக செயற்கையான மரங்களைத்தான் வாங்குவார்கள்.
ஆனால், இந்த ஆண்டில் இவர்கள் உண்மையான மரங்களைத் தேடி வாங்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்குப் பல காரணங்கள் இருந்தபோதிலும் கரோனா நோய்த் தொற்று அச்சம்தான் முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது.
இந்த மரங்கள் யாவும் தோட்டத்திலிருந்து நேரடியாகக் கொண்டுவரப்படுகின்றன... வீட்டிற்கு வெளியே வைத்தும் சிறப்பாக அழகுபடுத்திக் கொள்ளலாம்... கரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், இனிவரும் காலத்தில் தண்ணீர் ஊற்றி வளர்த்துக் கொள்ளவும் முயலலாம் என்கிறார்கள் அமெரிக்கர்கள்.
செயற்கை மரங்களை வாங்குவதில் கரோனா நோய்த் தொற்று ஆபத்து அதிகமென மக்கள் அஞ்சுகிறார்கள்.
ஓரிகானிலுள்ள மெக்கன்ஸி குக் நிறுவனம், வழக்கமாக 18 லட்சத்திலிருந்து 20 லட்சம் மரங்களை விற்பனைக்கு அனுப்பும்.
இந்த ஆண்டு செயற்கை மரங்களைப் பயன்படுத்துவோரில் 20 சதவிகிதத்தினருக்கும் மேலாக நிஜ மரங்களைத் தேடி வருவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
நிஜ கிறிஸ்துமஸ் மரங்களைச் சந்தைக்கு அனுப்புவதில் அமெரிக்காவிலுள்ள ஓரிகான் மாகாணம்தான் முதலிடத்தில் இருக்கிறது. உள்நாடு மட்டுமின்றி சீனா, ஜப்பான் உள்பட உலக நாடுகளுக்கு சுமார் 60 லட்சம் மரங்கள் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் மர வணிகத்தில் வாஷிங்டன், வடக்கு கரோலினா, பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களும் முதல் வரிசையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.