சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசூவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகரின் விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது தனியார் உணவு விடுதி. இங்கு வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாதவர்களால் தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 7 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் அல் கொய்தா அமைப்புடன் தொடர்பில் உள்ள அல் சபாப் தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் அரசுக்கும், பயங்கரவாத குழுக்களுக்குமிடையேயான சண்டையில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். முன்னதாக கடந்த நவம்பர் 17ஆம் தேதி தலைநகர் மொகடிசூவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.