ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை இரண்டு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 7 பேர் பலியானதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் பொதுமக்கள் மீதான சாலையோர குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்கு கோர் மாகாணத்தில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பொதுமக்கள் பயணித்த வாகனம் வெடி விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் உள்பட 7 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.
அதேபோல் கிழக்கு பக்தியா மாகாணத்தில், சாம்கனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நடந்த குண்டுவெடிப்பில் நான்கு பொதுமக்கள் காயமடைந்ததாக நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இரு வெடிகுண்டு தாக்குதலுக்கும் தலிபான் அமைப்பே காரணம் என ஆப்கன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில் குண்டுவெடிப்பில் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 2,330 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.