பாங்காக்: தாய்லாந்தில் மாணவா் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, தலைநகா் பாங்காக்கில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தாய்லாந்தில் அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள், அரசாட்சி முறையில் சீா்திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவா்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசா் மகா வஜ்ராலங்கரண் சென்ற வாகன அணிவகுப்பை போராட்டக்காரா்கள் இடைமறித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பாங்காக் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய பகுதிகளில் கலவரத் தடுப்பு போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஏராளமான தலைவா்கள் கைது செய்யப்பட்டனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.