உலகளாவிய காற்று மாசுபாட்டிற்கு சீனா, ரஷியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வடகரோலினாவில் நடந்த அதிபர் தேர்தல் பரப்புரையில் வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்றார். அப்போது தனது ஆதரவாளர்களிடம் பேசிய அவர் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளை உலகளாவிய காற்று மாசுபாட்டிற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்காவில் சிறந்த சுற்றுச்சூழல் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா அதன் சுதந்திரமான சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் எரிசக்திஆற்றல் சுதந்திரத்தை அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை விமர்சித்த டிரம்ப் அந்த ஒப்பந்தத்தால் சீனா, இந்தியா போன்ற நாடுகள் அதிக இலாபம் பெறுவதாகவும், அது அமெரிக்காவின் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட எரிபொருள் உற்பத்தித் தொழில்களுக்கு தடையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தை தவிர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட பாரீஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்திலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா வெளியேறியது. இந்நிலையில் பருவநிலை மாற்ற பாதிப்புகளுக்கு எதிராக செயல்பட அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு வாக்களிக்க வேண்டாம் என ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கடந்த சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.