புகுஷிமா அணு உலையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள அசுத்தமான நீரை கடலுக்குள் விட முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி பாதிப்பால் ஜப்பானின் புகுஷிமா டாய்ச்சி அணு உலை பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. எனினும் அணு உலையில் பயன்படுத்தப்பட்டு வந்த நீர் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஐசோடோப்பு நீக்கப்பட்ட நீரை கடலில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 1,000க்கும் மேற்பட்ட தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த நீரை விடுவிப்பதற்கான பணிகள் 2022 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் தொடங்கி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி நிறுவனம், வடிகட்டப்பட்ட கழிவு நீரை கடலில் வெளியேற்றுவதற்கு முன்பு கடல் நீரில் நீர்த்துப்போகச் செய்ய முடியும் என்று கூறுகிறது.
இதன் மூலம் அணு உலை தண்ணீரை என்ன செய்வது என்பது குறித்த பல ஆண்டுகால விவாதம் முடிவுக்கு வந்துள்ளது. அணு உலையின் தண்ணீரை கடலில் வெளியேற்றுவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறி ஜப்பான் அரசின் இந்த முடிவிற்கு சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நீரிலிருந்து கதிரியக்கப் பொருள்களை நீக்கினாலும் ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்பான ட்ரிடியம் வடிகட்டப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.