நியூயார்க்கில் வரும் 23-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளுக்குத் தளர்வுகள் வழங்கப்பட்டன.
அந்தவகையில் நியூயார்க் நகரில் வரும் 23-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து சமூக இடைவெளியுடன் பார்வையாளர்கள் அமரும் படி நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்கிற்கு 25 முதல் அதிகபட்சமாக 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரையரங்குகள் திறப்பது குறித்து உலகளாவிய சினிமா கூட்டமைப்பு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. இதில் தொற்று குறைந்து வரும் பகுதிகளில் படிப்படியாக திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.