பாா்சிலோனா: கரோனா பரவல் அச்சம் காரணமாக ஸ்பெயினில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளதாக சுகாதார நிபுணா்கள் எச்சரிக்கின்றனா். இரவு நேர கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூடுவதன் காரணமாகவே கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.
அதன் காரணமாக, ஸ்பெயினில் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டுப் பிரதமா் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளாா். இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா். பணிக்குச் செல்வது, மருந்து வாங்கச் செல்வது உள்ளிட்டவற்றுக்கு பொது முடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் 6 பேருக்கு அதிகமாகக் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொது முடக்கம் 6 மாதம் வரை அமலில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் கீழுள்ள கேனரி தீவுகளுக்கு பொது முடக்கம் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தேசிய அவசர நிலையை அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டிப்பதற்குத் திட்டமிட்டு வருவதாக பிரதமா் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளாா். அண்டை நாடான பிரான்ஸிலும் இரவு நேர பொது முடக்கம் அமலில் உள்ளது நினைவுகூரத்தக்கது.