வாஷிங்டன்: கரோனா தொற்றுப் பரவலில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 4.80 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதித்திருக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவக் கல்வி மையம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனைச் சங்கம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 9.5 சதவீதம் பேர் குழந்தைகள் என்றும், அந்த வகையில் இதுவரை 4,75,439 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 1 லட்சம் குழந்தைகளில், 631 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 13-27ம் தேதிக்குள் மட்டும் சுமார் 70 ஆயிரம் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 17% கரோனா தொற்று உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கரோனா பாதித்த குழந்தைகளில் 0.6 முதல் 4.1 சதவீத குழந்தைகள்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன, அதில் 0 முதல் 0.3 சதவீதக் குழந்தைகள்தான் மரணத்தை தழுவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கரோனா தொற்று குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தெரிய வந்திருப்பதாகவும், இது குறித்து விரிவான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை நிலவரப்படி அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60.73 லட்சத்தை எட்டிவிட்டது. இதில் 1.84 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.