கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் உலக அளவில் 2021ஆம் ஆண்டில் 4.7 கோடி பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர் என்று ஐக்கிய நாடுகள் அவை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்றால் உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் சிக்கலில் உள்ளது.
இந்நிலையில் கரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.6 கோடி மக்கள் வறுமை நிலைக்கு செல்வர் என ஐக்கிய நாடுகளின் அவை தெரிவித்துள்ளது. இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இது ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கரோனா நெருக்கடி பெண்களுக்கான வறுமை விகிதத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்றும் வறுமையில் வாழும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளி விரிவாகும் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் 2019- 2021 ஆண்டில் பெண்களின் வறுமை விகிதம் 2.7 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொற்றுநோய் காரணமாக வறுமை நிலை 9.1 சதவீதம் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தீவிர வறுமையில் வாழும் மொத்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கையை 43.5 கோடியாக உயர்த்தும் என்றும் இந்த நிலை 2030 வரை தொடரும் என்றும் ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது.
தெற்காசியாவில் தொற்றுநோய்க்கு முந்தைய பெண் வறுமை விகிதம் 2021 ஆம் ஆண்டில் 10 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் இப்போது அது 13 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"குடும்பத்தை பராமரிப்பதற்கான பெரும்பாலான பொறுப்பை பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் குறைவாக சம்பாதிக்கிறார்கள், குறைவாக சேமிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, பெண்களின் வேலைவாய்ப்பு ஆண்களை விட 19 சதவீதம் அதிக ஆபத்தில் உள்ளது" என்று ஐ.நா. மகளிர் நிர்வாக இயக்குநர் பம்ஸைல் மலாம்போ-என்குகா தெரிவித்துள்ளார்.