நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 17 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்றிரவு பெய்த தொடர் கனமழையால் மேற்கு நேபாளத்தின் பாக்லாங் இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
உடனடியாக தகவல் அறிந்து மீட்புப்படையினருடன் வந்த காவல்துறையினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை தேடி வருகின்றனர். நிலச்சரிவில் இருந்து 2 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 17 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.