கலிபோர்னியாவில் நடப்பாண்டு ஏற்பட்ட காட்டுத்தீயால் இதுவரை 20 லட்சம் ஏக்கர் அளவிலான பரப்பு தீயில் எரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கலிபோர்னியாவில் சமீபத்தில் அதிகரித்துள்ள வெப்ப அலைகளால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள வெப்பஅலைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
நடப்பாண்டு ஏற்பட்டக் காட்டுத்தீயால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுப்படுத்தப்பட முடியாத காட்டுத் தீ 3300க்கும் மேற்பட்ட குடியிருப்புக் கட்டமைப்புகளை எரித்துள்ளதாக கலிபோர்னியா வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
நம்பமுடியாத அளவிற்கான மிகக் குறுகிய காலக் காட்டுத்தீ நெருக்கடியால் ஒரே ஆண்டில் கலிபோர்னியாவில் 20 லட்சம் ஏக்கர் அளவிலான பரப்புநிலங்கள் தீயில் எரிந்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி டேனியல் ஸ்வைன் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவின் பெரும்பகுதி தற்போது வலுவான சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ளது. கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் கடந்த ஆகஸ்ட் 18 அன்று மாநிலம் தழுவிய அவசரநிலையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.