ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 504 பேர் உயிரிழந்ததை அடுத்து நாட்டின் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,27,000 கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் பல்வேறு நாடுகள் தவித்து வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா இறப்புகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி, பிரேசிலில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும் புதிதாக 14,279 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 41,62,073 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான சாவோ பாலோவில் இதுவரை 8,58,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31,430 பேர் உயிரிழந்துள்ளனர். ரியோ டி ஜெனிரோவில் 2,33,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 16,646 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்புப்பணியில் பிரேசில் அரசு அக்கறையின்மையுடன் செயல்படுவதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.