கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 8 ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள இங்கிலாந்து வான்வெளி பகுதி செந்நிறமாக மாறியதன் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
கலிபோர்னியாவில் சமீபத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள வெப்பஅலைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஏற்பட்டக் காட்டுத்தீயால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுப்படுத்தப்பட முடியாத காட்டுத் தீ 3300க்கும் மேற்பட்ட குடியிருப்புக் கட்டமைப்புகளை எரித்துள்ளதாக கலிபோர்னியா வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த சில தினங்களாக கலிபோர்னியா வான்வெளி முழுவதும் அடர் செந்நிறமாக மாறியுள்ளது. அதிகரித்து வரும் காட்டுத்தீயால் வெளிவரும் புகை மண்டலம் கலிபோர்னியா முழுவதும் பரவியுள்ளது.
இந்நிலையில் கலிபோர்னியாவிலிருந்து 8 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இங்கிலாந்திலும் காட்டுத்தீயின் தாக்கம் பதிவாகி உள்ளது. அதன்படி இங்கிலாந்தில் வான்வெளி முழுவதும் செந்நிறமாக காட்சியளித்துள்ளது.
"காட்டுத் தீ புகைமண்டலம் அதிக தூரம் பயணிப்பது மிகவும் அசாதாரணமானது." என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.