கரோனா பரிசோதனைகளுக்காக மோடி என்னைப் பாராட்டினார்: ட்ரம்ப் பெருமிதம்
வாஷிங்டன்: அதிக அளவிலான கரோனா பரிசோதனைகளுக்காக இந்தியப் பிரதமர் மோடி என்னைப் பாராட்டினார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதியன்று நடக்க உள்ள அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதற்கான பிரசாரங்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. அதன் ஒருபகுதியாக சனிக்கிழமை இரவு அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் ட்ரம்ப் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘நாம் இந்தியா மற்றும் பலப்பல நாடுகளை விடவும் அதிக அளவிலான கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நாம் இந்தியாவை விடவும் நான்கு கோடியே நாற்பது லட்சம் சோதனைகள் அதிகமாகச் செய்துள்ளோம். இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தார். அதிக அளவிலான கரோனா பரிசோதனைகளுக்காக சிறப்பான செயல்பாடு என்று என்னைப் பாராட்டினார். அமெரிக்காவின் பின்னால் இகழ்ந்து பேசும் நேர்மையற்றவர்களுக்கு அதை எடுத்துக் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.