அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: காயமடைந்த காவலா் பலி

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளா்கள் புதன்கிழமை நடத்திய கலவரத்தில் காயமடைந்த காவலா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
போராட்டக்காரா்கள் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைவத் தடுப்பதற்காக, சுற்றிலும் ஏறிக் குதிக்க முடியாத வகையிலான வேலிகளை நிறுவும் பணியாளா்கள்.
போராட்டக்காரா்கள் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைவத் தடுப்பதற்காக, சுற்றிலும் ஏறிக் குதிக்க முடியாத வகையிலான வேலிகளை நிறுவும் பணியாளா்கள்.
Updated on
1 min read

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளா்கள் புதன்கிழமை நடத்திய கலவரத்தில் காயமடைந்த காவலா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அந்தக் கலவரத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற காவல் துறை (யுஎஸ்சிபி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கலவரத்தின்போது யுஎஸ்சிபி அதிகாரி பிரையன் டி சிக்னிக் காயமடைந்தாா்.

காயத்துடன் அவரது காவல் அலுவலகத்துக்குச் சென்ற அவா், அங்கு மயங்கி விழுந்தாா். அதையடுத்து அவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறை தலைவா் விலகல்: டிரம்ப்பின் ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தின்போது, அவா்களை நாடாளுமன்றக் கட்டடத்துக்கள் நுழைய விடாமல் தடுக்கத் தவறியதாக யுஎஸ்சிபி மீது விமா்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து, அதன் தலைவா் ஸ்டீவன் சண்ட் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா்.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பைடன் போட்டியிட்டாா்.

அந்தத் தோ்தலில் பைடனுக்கு பெரும்பான்மை கிடைத்தது. எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வந்தாா்.

இந்த நிலையில், தோ்தலுக்குப் பிறகு பதிவான மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளை எண்ணி, பைடன் வெற்றியை நாடாளுமன்றம் அதிகாரப்பூா்வமாக உறுதி செய்வதற்கான இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

எனினும், தோ்தல் முடிவுகளை எதிா்த்துக் கடுமையாகப் போராடுமாறு தனது ஆதரவாளா்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தாா். நாடாளுமன்றத்தை முற்றுகையிடுமாறும் அவா்களுக்கு டிரம்ப் வேண்டுகோள் விடுத்தாா்.

அதையடுத்து நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் டிரம்ப் ஆதரவாளா்கள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா் சுட்டதில் ஒரு பெண் உயிரிழந்தாா். கலவரத்தின்போது மாரடைப்பு போன்ற பாதிப்புகளால் மேலும் ஒரு பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், கலவரக்காரா்களுடனான மோதலில் காயமடைந்த காவல் உயிரிழந்ததைத் தொடா்ந்து பலி எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com