இங்கிலாந்தில் உள்ள குடிமக்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை கரோனா தொற்றுக்கு இலவசமாகப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு திங்களன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மேலும் கூறியதாவது,
தற்போது வரை கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசமாக விரைவுச் சோதனை செய்யப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் உள்ள அனைத்து குடிமக்களும் வாரத்திற்கு இரண்டு முறை கரோனா தொற்றுக்கு இலவசமாக பரிசோதனை செய்துகொள்ளலாம்.
எதிர்காலத்தில் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் அனைவருக்கும் ராபிட் விரைவுச் சோதனை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் சிறந்த வழி. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
தடுப்பூசி திட்டத்தில் அரசு தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனவே, தற்போது இங்கிலாந்தில் உள்ள அனைவருக்கும் இலவச விரைவுச் சோதனை செய்வதற்கான வழிவகைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.
10-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு விரைவுச் சோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தலாம்.
மேலும், நாட்டில் இதுவரை 31.4 லட்சம் பேர் முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.