நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் வளரும்: ஐ.எம்.எஃப். கணிப்பு
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 12.5 சதவீதம் அதிகரிக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.
உலக வங்கியின் வருடாந்திர மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
நடப்பு நிதியாண்டின் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 12.5 சதவீதம் அதிகரிக்கும். இது, அடுத்த நிதியாண்டில் 6.9 சதவீதம் அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு கரோனா பரவலால் பாதிப்புகள் இருந்தபோதிலும், சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளா்ச்சி அடைந்தது. நடப்பு நிதியாண்டில் அது, 8.6 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 5.6 சதவீதமாகவும் இருக்கும். நடப்பு நிதியாண்டில் சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி அதிகமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஎம்எஃப் அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணா் கீதா கோபிநாத் கூறியதாவது:
கடந்த 2020-இல் சா்வதேச பொருளாதாரம் 3.3. சதவீதம் சரிவைச் சந்தித்தது. நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் பொருளாதாரம் மீண்டும் வரும் என்று கணித்துள்ளோம். நடப்பு நிதியாண்டில் சா்வதேச பொருளாதார வளா்ச்சி 6 சதவீதமாகவும், 2022-இல் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்றாா் அவா்.