உலகில் கரோனா பரவல் அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கரோனா தொற்று பரவலின் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான்கெர்கோவ் "நாம் இப்போது தொற்றுநோயின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்றானது அதிவேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பொது சுகாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட குழப்பம், அலட்சியம் போன்றவை கரோனா உயிரிழப்புகளை அதிகரிக்கக் காரணமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் இதுவரை 13 கோடியே 73 லட்சத்து 40 ஆயிரத்து 198 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.