சமூக ஊடகங்களில் கரோனா தொடர்பான தவறான பதிவுகளை நீக்குமாறு இந்தியா அண்மையில் உத்தரவிட்டது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு மற்றும் அந்த பாதிப்பை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து தவறான தகவலைப் பரப்பும் வகையிலான 100 சர்ச்சைக்குரிய பதிவுகள் சுட்டுரை, முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்தன. மத்திய அரசு உத்தரவின் பேரில் அந்தப் பதிவுகளை சமூக ஊடக நிறுவனங்கள் அண்மையில் நீக்கின.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறியது: இந்திய அரசு உத்தரவின்பேரில், கரோனா தொடர்பான சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக ஊடக நிறுவனங்கள் நீக்கியுள்ளன. இது உலகெங்கிலும் உள்ள பேச்சு சுதந்திரம் குறித்த நமது பார்வையுடன் ஒத்துப்போகவில்லை.
பதிவுகளை நீக்கும் கோரிக்கைகளைக் கண்காணிக்கும் லுமேன் டேட்டாபேஸ் நிறுவனம், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்பட முக்கிய நபர்களின் 52 சுட்டுரைகளை தணிக்கை செய்ததாகத் தெரிவித்துள்ளது என்றார்.
அமெரிக்காவிலும், உலகின் பிற பகுதிகளிலும் காணக்கூடிய பதிவுகள், உள்ளூர் விதிமுறைகளின்படி இந்தியாவில் தடுக்கப்படுவதாக "தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த சுட்டுரை நிறுவன செய்தித் தொடர்பாளர், "நாங்கள் சட்டரீதியான கோரிக்கையைப் பெறும்போது, சுட்டுரை விதிகள், உள்ளூர் சட்டம் ஆகிய இரண்டின் கீழ் அதை ஆய்வு செய்கிறோம். பதிவுகள் சுட்டுரையின் விதிகளை மீறினால், அவை சேவையிலிருந்து அகற்றப்படும். அது ஒரு குறிப்பிட்ட அதிகார வரம்பில் சட்டவிரோதமானது என்று தீர்மானிக்கப்பட்டாலும், சுட்டுரை விதிகளை மீறுவதாக அது இல்லாவிட்டால், இந்தியாவில் அந்தப் பதிவுகளை நாங்கள் நிறுத்தி வைக்கலாம்' என்றார் அவர்.