சாவ் பாலோ: பிரேஸிலில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அதிபர் ஜெயிர் பொல்சொனாரோவின் தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்த நாட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக பொது முடக்கங்களை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் முக்கியமானவர்களில் பொல்சொனாரோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனாவுக்கு எதிராக அவர் போதிய நடவடிக்கை எடுக்காததும் தடுப்பூசித் திட்டத்தை சரிவர நிறைவேற்றாததுமே நாட்டில் அந்த நோய் பரவல் தீவிரமாக இருப்பதற்குக் காரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அரசின் கரோனா நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறு நாடாளுமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த 8}ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, நாடாளுமன்ற மேலவையான செனட் சபைக் குழு அந்த விசாரணையை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.
கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேஸிலில், புதன்கிழமை நிலவரப்படி 1,44,46,541 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 3,95,324 பேர் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.