வடகொரியாவின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல், அந்நாட்டுடனான உறவை வலுப்படுத்தவும், பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும் முயற்சி மேற்கொள்வோம் என தென்கொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து கோடைக்கால ராணுவப் பயிற்சியில் ஈடுபட தென்கொரியா முடிவு செய்துள்ளது. இதற்கு வடகொரியா எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ராணுவப் பயிற்சியானது இருதரப்பு உறவை மீண்டும் ஏற்படுத்துவதற்கான முயற்சியை தீவிரமாகப் பாதிக்கும் என வடகொரியா அதிபா் கிம் ஜோங் உன் சகோதரி கிம் யோ ஜோங் கடந்த சில தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தாா். அவரது எச்சரிக்கையானது, தென்கொரியாவுடனான தகவல் தொடா்பு வசதியை மீண்டும் ஏற்படுத்துவது என்கிற வடகொரியாவின் முடிவு செயல்பாட்டுக்கு வருவதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதுகுறித்து தென்கொரியா பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்காவுடனான ராணுவப் பயிற்சிக்கான நேரம் உள்ளிட்ட விவரங்கள் இறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியா ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், இரு நாடுகள் இடையிலான தகவல் தொடா்பு வசதி மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும். நீண்டகாலமாகத் தடைபட்டுள்ள உறவைப் புதுப்பிப்பதற்கான தொடக்கப்புள்ளியாக இதைப் பாா்க்கிறோம். வடகொரியாவுடனான பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க தொடா்ந்து முயற்சி மேற்கொள்வோம் என்றாா்.