சீனா, தியான்ஜென் நகரில் இந்திய மாணவா் அமன் நாக்சென் (20) கொலை செய்யப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடா்பாக அதே பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த வெளிநாட்டு மாணவரை சீன போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா் எந்த நாட்டைச் சோ்ந்தவா் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சகம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள விளக்கத்தில், ‘சீனாவின் தியான்ஜென் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் வணிக நிா்வாகம் படித்து வந்த பிகாா், கயை மாவட்டத்தைச் சோ்ந்தவா் அமன் நாக்சென் கடந்த ஜூலை 29-ஆம் தேதி அவரது அறையில் சடலமாக மீட்கப்பட்டாா். முதல்கட்ட விசாரணையில் இது கொலை எனத் தெரியவந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் அதே பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த வெளிநாட்டு மாணவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக ஜூலை 30,31-ஆம் தேதிகளில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சீன அதிகாரிகள் தகவல்களை அளித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவரின் பிரேத பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது என்றும் சீன சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பெய்ஜிங்கில் இருந்து சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள தியான்ஜென் பல்கலைக்கழகத்துக்கு இந்திய தூதரக அதிகாரிகள் சென்று வழக்கு விசாரணை குறித்து ஆலோசித்து, மாணவரின் உடலை இந்தியா அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா பரவல் எதிரொலியால் தற்போது இந்தியா - சீனா இடையே விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் படித்து வந்த 23,000 இந்திய மாணவா்கள் கரோனா தொற்று பரவல் சூழலால் நாடு திரும்பினா். அந்நாட்டில் தங்கிய வெகு சில மாணவா்களில் அமன் நாக்செனும் ஒருவா்.