கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது தலைநகர் ஏதென்ஸை நெருங்கி வருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
கிரீஸ் நாட்டில் வரலாறு காணாத வெப்ப அலை நிலவி வருவதால் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தலைநகர் ஏதென்ஸ்க்கு வடக்கே தீ பரவி வருவதால் அப்பகுதியை கரும்புகை சூழ்ந்துள்ளது.
இதையும் படிக்க | அச்சம் தரும் காலநிலை மாற்றம்: அழியப்போகிறதா உலகம்?
காட்டுத்தீ பரவல் வேகமாகி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏதென்ஸ் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
நாட்டின் பேரிடர் மீட்புத்துறை மற்றும் ராணுவத்தினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் வானிலிருந்து தண்ணீரை இறைஞ்சி தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
காடுகளில் உள்ள வன விலங்குகள் இரண்டாவது வாரமாக எரிந்துவரும் தீயில் சிக்கி பலியாகி வருவது அதிகரித்து வருகிறது. வெப்ப அலைகளின் காரணமாக தெற்கு ஐரோப்பாவின் துருக்கி, அல்பேனியா நாடுகளிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக வடக்கு மாசிடோனியாவில் அடுத்த 30 நாள்களுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் வர்ஜினிஜஸ் சின்கெவிசியஸ், தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாதிப்பானது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய எச்சரிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.