அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆப்கான் நாட்டை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் பின்லேடனுக்கு, அப்போதைய ஆப்கன் ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.
இதையும் படிக்க | ஆப்கன் போர் முடிவுக்கு வந்தது: தலிபான்கள்
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
நேற்று ஆப்கானை விட்டு அதிபர் மற்றும் துணை அதிபர்கள் வெளியேறியதையடுத்து, அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆப்கானை நாட்டை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது, பைடன் ஆப்கானுக்கு துரோகம் செய்ததாகவும், அனைத்திற்கும் பைடன் தான் பொறுப்பு என்றும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஃபர்சானா ஹபீஸ் என்பவர் கூறியது, “தலிபான்கள் எங்கள் மக்களைக் கொல்கிறார்கள், பெண்களுக்கு அங்கு சுதந்திரம் இல்லை, மக்களை பாதுகாக்க யாரும் இல்லை” எனத் தெரிவித்தார்.