தலிபான்களுக்கு ஆதரவளிப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனியின் சகோதரர் ஹஷ்மத் கனி அகமதுசாய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு ஆட்சியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனியின் சகோதரர் ஹஷ்மத் கனி அகமதுசாய், தலிபான்களின் தலைவர் கலீல்-உர்-ரஹ்மான் மற்றும் மதத் தலைவர் முஃப்தி மஹ்மூத் ஜாகிர் முன்னிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானுக்கான புதிய ஆட்சியை அமைப்பதற்கான கட்டமைப்பை வெளியிட இருப்பதாக இஸ்லாமிய இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதற்காக, "தலிபானில் உள்ள சட்ட, மத மற்றும் வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தானிலிருந்து 85 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலை தலிபான்கள் சுற்றி வளைத்ததையடுத்து அஷ்ரஃப் கனி (72) தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்.
பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து அஷ்ரஃப் கனி வெளியிட்ட முகநூல் விடியோ செய்தியில், 'ரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காகவே' காபூலில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறினார், அதே நேரத்தில் ரத்தக்களரியை தவிப்பதற்காகவும், காபூலில் பேரழிவு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதாலும் தாயகத்தை விட்டு வெளியேறினேன். நான் காபூலிலேயே இருந்திருந்தால் வன்முறை வெடித்திருக்கும். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியபோது கார்கள் நிறைய பணம் மற்றும் பொருள்கள் கொண்டு தப்பிச் சென்றதாக கூறுவது பொய், ஆதாரமற்றவை. எனது உயிருக்கு ஆபத்திருப்பதாக எனது பாதுகாப்பு அதிகாரிகள் எனக்கு அறிவுறுத்தியதுடன் உடனே நாட்டை வெளியேறுமாறு ஆலோசனை வழங்கியதை அடுத்து விருப்பத்திற்கு மாறாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினேன் என்று கூறியிருந்தார்.