கரோனா பெருந்தொற்றின் விளைவாக மூன்றில் இரண்டு இந்தியர்கள் இணையத்திற்கு அடிமையாகியுள்ளனர் என சமீபத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கரோனா பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொற்று காலத்தில் இணைய பயன்பாடு என்பது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்நிலையில், கரோனாவின் விளைவாக மூன்றில் இரண்டு இந்தியர்கள் அதாவது 66 சதவிகிதத்தினர் இணையத்திற்கு அடிமையாகியுள்ளனர் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சைபர் பாதுகாப்பு குறித்து நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனமான நார்டன் லைஃப்லாக் 1000 இந்தியர்களிடம் இணைய கருத்து கணிப்பு நடத்தியது. பணி, கல்வி தொடர்பாக பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு நாள் ஒன்றுக்கு 4.4 மணி நேரத்தை வயது வந்த இந்தியர்கள் இணையத்தில் செலவிடுகிறார்கள் என அதில் தெரியவந்துள்ளது.
பணி, கல்வி ரீதியான பயன்பாட்டை தவிர்த்து மற்றவற்றுக்காக இணையத்தில் செலவிடுவது கரோனா காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது என பத்தில் எட்டு இந்தியர்கள் அதாவது 82 சதவிகிதத்தினர் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர். வயது வந்தவர்கள் பயன்படுத்தும் முக்கிய சாதனமாக ஸ்மார்ட்போன் உருவெடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஸ்மார்ட்போன்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 84 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை அதிக நேரம் பார்ப்பதால் உடல் அளவில் பாதிக்கப்படுகிறோம் என 74 சதவிகிதத்தினரும் மனதளவில் பாதிப்படைகிறோம் என 55 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | தலைநகரை மீண்டும் தாக்குல் கரோனா? நிபுணர்கள் எச்சரிக்கை
பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்மார்ட்போன்களை வாங்க மாட்டோம் என 50 சதவிகிதத்தினர் கருத்துக்கணிப்புல் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், தனியுரிமை பாதிக்கப்படுவதால் ஸ்மார்ட்போன்களை வாங்க மாட்டோம் என 40 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.