அட்டாரி: பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து தம்பதியான பலராமன் மற்றும் நிபுவுக்கு கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அட்டாரி எல்லைப் பகுதியில் ஆண் குழந்தை பிறந்தது.
அட்டாரி சர்வதேச எல்லைப் பகுதியில், பிறந்த தங்களது ஆண் குழந்தைக்கு, இதுவரை யாருமே வைத்திராத, வித்தியாசமான பெயரை அதே வேளையில், அவனது பிறப்பை நினைவூட்டும் வகையில் வைக்க நினைத்த பெற்றோர், குழந்தைக்கு பார்டர் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
குழந்தைக்கு நாங்கள் பார்டர் என்று பெயர் வைத்துள்ளோம், அது எப்போதுமே எங்களுக்கு, அவன் எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பிறந்தான் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும், அட்டாரி சர்வதேச எல்லையில், மிகக் குளிரான ராத்திரிப் பொழுதை வெட்டவெளியில் கழித்ததை நினைவூட்டும் என்கிறார் பலராமர்.
இதையும் படிக்கலாமே.. இதுதான் ஒமைக்ரானின் புதிய அவதாரமோ?
பாகிஸ்தானிலிருந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நூற்றுக்கணக்கானோருடன் இந்தியாவுக்கு புனிதப் பயணம் தொடங்கினோம். ஆனால், புனிதப் பயணம் முடிந்து, திரும்பும் போது, கரோனா பேரிடர் காரணமாக பாகிஸ்தான் எல்லைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், நாங்கள் ஜெய்பூர் மற்றும் ஜோத்பூரில் தங்கி கூலி வேலைகள் செய்து வந்தோம்.
இப்போது, அட்டாரி எல்லையில், பாகிஸ்தான் நாட்டுக்குள் அனுமதிக்காக காத்திருக்கும் போது, மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.
அட்டாரி எல்லையில் காத்திருந்த நூற்றுக்கணக்கான பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து குடும்பங்கள், அவர்களுக்கான உள்நுழைவு அனுமதி கிடைத்ததும், திங்கள்கிழமை மாலை, பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பலராமன் குடும்பம் மட்டும் அனுமதிக்கப்படவில்லை, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையான பார்டரின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டுடன் உள்ளே வருமாறு அதிகாரிகள் கூறிவிட்டனராம்.