மடகாஸ்கரில் ஹெலிகாப்டரில் சென்ற போது திடீரென ஏற்பட்ட விபத்தால் கடலில் குதித்து 12 மணி நேரம் நீச்சல் அடித்து கரைக்கு வந்துள்ளார் அமைச்சர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவு நாடான மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே கடந்த டிச.19 ஆம் தேதி 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் , 39 பேர் உயிரிழந்துள்ளனர். 68 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்ததும் மீட்புப் பணியில் ஈடுபட சென்ற மீட்புப்படையுடன் அந்நாட்டின் அமைச்சர் செர்ஜ் கேலேவும் ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அமைச்சர் கடலில் குதித்து 12 மணி நேரம் நீந்தி மஹாம்போ என்னும் தீவை அடைந்து உயிர் பிழைத்திருக்கிறார்.
இதுகுறித்து டிவிட்டரில் விடியோ ஒன்றை வெளியிட்டனர்.இதில் அமைச்சர் கேலே ‘திங்கள்கிழமை மாலை 7.30 மணிக்கு ஆரம்பித்த நீச்சல் மறுநாள் காலை 7.30 நீடித்தது. பின் மஹாம்போ தீவை அடைந்தேன்.நான் இறப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை’ எனத் தெரிவித்திருக்கிறார்.