ஒமைக்ரான் கரோனா உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்த உருமாறிய வகை ஓராண்டுக்கு முன்பு கண்டறியப்பட்ட கரோனாவை போல் இல்லை என ஆக்ஸ்போர்டு நோய் எதிர்ப்பு நிபுணர் ஜான் பெல் தெரிவித்துள்ளார்.
பிபிசி வானொலி நான்குக்கு அவர் அளித்த பேட்டியில், "நவம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கரோனாவின் தீவிரம் குறைவாக இருந்தது. அதபோல், பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான கால அளவும் குறைவாகவே இருந்தது.
ஓராண்டுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பியது, நிறைய பேர் அகால மரணம் அடைந்தது போன்ற பயங்கரமான காட்சிகள் தற்போது வரலாறானது. இது தொடரும் என்றே நான் நினைக்கிறேன்" என்றார்.
இந்தாண்டு இறுதி வரை, கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என பிரிட்டன் அரசு அறிவித்திருந்த நிலையில், பெல் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில், கரோனா பாதிப்பு 25 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரிட்டன் பிரதமர் போர்ஸ் ஜான்சனுக்கு அழுத்தம் எழுந்துள்ளது. சமீபத்திய தரவுகளை கண்காணித்து வருவதாகவும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சஜித் ஜாவித் வலியுறுத்தியுள்ளார்.