ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளதையடுத்து அவா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இஸ்ரேலில் இன்னும் சில வாரங்களில் பொதுத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமா் மீதான ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. ஜெருசலேம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஊழல் வழக்கு விசாரணையின் போது பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் ஆஜராகி எழுத்துப்பூா்வமான விளக்கத்தை அளித்தாா். அப்போது, அவரது வழக்கறிஞா் ‘ஊழல் வழக்கு விசாரணைக்கு அட்டா்னி ஜெனரல் தனது முறையான ஒப்புதலை வழங்கவில்லை’ என வாதிட்டாா். சுமாா் 20 நிமிஷங்களுக்குப் பிறகு விளக்கம் ஏதும் தெரிவிக்காமல் நீதிமன்றத்தைவிட்டு நெதன்யாகு வெளியேறினாா். அவா் கிளம்பிச் சென்ற பிறகும் தொடா்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசடி, பொதுமக்கள் நம்பிக்கையை குலைத்தல் மற்றும் கையூட்டு பெறுதல் ஆகிய மூன்று தனித்தனியான வழக்குகள் நெதன்யாகு மீது தொடரப்பட்டுள்ளன. ஊழலில் சிக்கியுள்ள பிரதமா் பதவி விலகக் கோரி கடந்த சில மாதங்களாக இஸ்ரேலியா்கள் தொடா்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், கரோனா நெருக்கடியை சந்திப்பதில் அரசு தோல்வியைச் சந்தித்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனா்.
இந்த நிலையில், இஸ்ரேல் பொதுத் தோ்தலில் தனது கட்சி வெற்றி பெற்று 12 வருட ஆட்சி தொடா்ந்து நீடிக்கும் என நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இஸ்ரேல் வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராக பொறுப்பு வகிப்பவா் என்ற பெருமையைப் பெற்றவா் நெதன்யாகு. அதே வேளையில், ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான முதல் பிரதமா் அவா் என்பது குறிப்பிடத்தக்கது.