மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு சீன அரசு ஆதரவு தெரிவிப்பதாக வெளியான தகவலையடுத்து மியான்மர் மக்கள் சீன தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மியான்மர் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டது. மேலும் நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனர்.
மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ள ராணுவத்தைக் கண்டித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக சீன செயல்படுவதாக குற்றம்சாட்டி மியான்மரின் யாங்கோனில் உள்ள சீன தூதரகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவத்திற்கு ஆதரவாக சீன அரசு தொழில்நுட்ப பணியாளர்களை வழங்கி உதவி வருவதாக குற்றம்சாட்டி மக்கள் சர்வாதிகாரத்தை ஆதரிக்க வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்ட முழக்கமிட்டனர்.
இதுகுறித்து விளக்கமளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், "மியான்மர் தொடர்பான பிரச்னைகள் குறித்து சீனாவைக் குறித்து தவறான தகவல்களும், வதந்திகளும் பரப்பப்படுகின்றன" என்று தெரிவித்தார்.