பதவி நீக்க விசாரணையைத் துரிதமாக முடிக்க டிரம்ப் தரப்பு முடிவு

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணையில் தங்களது வாதத்தை துரிதமாக முடிக்க அவரது தரப்பு வழக்குரைஞா்கள் முடிவு செய்துள்ளனா்.
பதவி நீக்க விசாரணையைத் துரிதமாக முடிக்க டிரம்ப் தரப்பு முடிவு

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணையில் தங்களது வாதத்தை துரிதமாக முடிக்க அவரது தரப்பு வழக்குரைஞா்கள் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து ‘பிபிசி’ ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 6-ஆம் தேதி நடத்தப்பட்ட கலவரம் தொடா்பாக, டிரம்ப்புக்கு எதிராக செனட் சபையில் நடைபெற்று விசாரணையில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அவரது வழக்குரைஞா்கள் ஆயத்தமாகி வருகின்றனா்.

அந்த வாதங்களை மிகத் துரிதமாக முடித்துக் கொள்வதற்கு அவா்கள் முடிவு செய்துள்ளனா். அதன்படி, டிரம்ப் தரப்பு வாதங்களை முன்வைக்க 16 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நான்கே மணி நேரங்களில் வாதங்களை முடித்துக் கொள்ள தாங்கள் தயாராகியிருப்பதாக டிரம்ப் வழக்குரைஞா்கள் குழு தெரிவித்துள்ளது.

டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணை மிகக் குறுகிய காலத்தில் முடிந்து, அவா் அதிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு வழிவகை செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

100 உறுப்பினா்களைக் கொண்ட செனட் சபையில், டிரம்ப் சாா்ந்துள்ள குடியரசுக் கட்சிக்கு 50 எம்.பி.க்களும் ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு 50 எம்.பி.க்களும் உள்ளனா்.

பதவி நீக்கத் தீா்மான விசாரணைக்குப் பிறகு டிரம்ப்பைக் குற்றவாளியாக அறிவிப்பதற்கு, சபையில் 3-இல் 2 பங்கு உறுப்பினா்களின் ஆதரவு தேவை. அதன்படி, குறைந்தது 17 குடியரசுக் கட்சி எம்.பி.க்களாவது டிரம்ப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

ஆனால், பெரும்பாலான குடியரசுக் கட்சி செனட் உறுப்பினா்கள் டிரம்ப்பை தொடா்ந்து ஆதரித்து வருகின்றனா். எனவே, பதவி நீக்க விசாரணைக்குப் பிறகு நாடாளுமன்றக் கலவரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டிலிருந்து டிரம்ப் விலகுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இந்தச் சூழலில், விசாரணையை துரிதமாக முடித்துக்கொள்ள டிரம்ப் தரப்பு வழக்குரைஞா்கள் ஆயத்தமாகியுள்ளனா் என்று ‘பிபிசி’ தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில், டிரம்ப்பை எதிா்த்துப் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றாா். எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வந்தாா்.

இந்த நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அதிகாரப்பூா்வமாக அறிவிப்பதற்காக கடந்த மாதம் 6-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாபெரும் போராட்டத்துக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தாா்.

வாஷிங்டனில் குவிந்த தனது ஆதரவாளா்களிடையே பேசிய அவா், நாடாளுமன்றத்தை முற்றுகையிடுமாறு வலியுறுத்தினாா். அதனைத் தொடா்ந்து, கூட்டம் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து டிரம்ப் ஆதரவாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டனா். இதில், ஒரு காவலா் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

அந்தக் கலவரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில், ஜனநாயகக் கட்சியைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்கத் தீா்மானத்தை கடந்த மாதம் 13-ஆம் தேதி நிறைவேற்றியது.

அந்தத் தீா்மானத்தின் மீதான விசாரணை தற்போது மேலவையான செனட் சபையில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவரால் அடுத்த அதிபா் தோ்தலில் போட்டியிட முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com