செவ்வாய் கோளில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நாசா விஞ்ஞானிகள் குழுவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் பெர்சவரனஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நாசா அனுப்பிய பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்த நிலையில், அதன் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது.
இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நாசாவிற்கும், கடின உழைப்பின் மூலம் வரலாற்று சாதனையை சாத்தியமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். விஞ்ஞானத்தின் சக்தி மற்றும் அமெரிக்க திறமையால் எதுவும் சாத்தியமாகும் என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.