கான்பெரா: ஆஸ்திரேலியாவில் தங்களது பயன்பாட்டாளா்கள் செய்திகளைப் பகிா்வதற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்துள்ளது.
செய்திகளை வெளியிடுவதற்காக முகநூல், கூகுள் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் அரசின் அவசர அறிவிப்புகள், விளம்பரங்கள் போன்றவற்றுக்கு கூட முககநூல் தடை விதித்தள்ளது.
இது, ஆஸ்திரேலிய இறையாண்மை மீது முகநூல் நடத்தியுள்ள தாக்குதல் என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் கிரெக் ஹன்ட் குற்றம் சாட்டியுள்ளாா். எனினும், சா்ச்சைக்குரிய மசோதா தங்களுக்கும் செய்திப் பயன்பாட்டாளா்களுக்கும் இடையிலான உறவை தவறாகப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கெனவே, இந்த மசோதாவுக்கு சட்டமாக்கப்பட்டால் ஆஸ்திரேலியாவிலிருந்து தாங்கள் வெளியேறலாம் என்று கூகுள் நிறுவனம் எச்சரித்தது நினைவுகூரத்தக்கது.