நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கடந்த 2011-ஆம் ஆண்டு சேதமடைந்த ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலைகளில், கடந்த வார நிலநடுக்கத்தால் புதிய சேதம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அணு உலையை பராமரித்து வரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவா் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கேய்சுகே மட்சுவோ வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் 1 மற்றும் 3-ஆவது அணு உலைகளில் குளிரூட்டுவதற்கான தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது.
இது, ஏற்கெனவே அந்த அணு உலைகளில் ஏற்பட்டிருந்த சேதம், மேலும் மோசமாகியுள்ளதைக் காட்டுகிறது.
கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட 7.3 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கம் காரணமாக, இந்த புதிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அணு உலையிலிருந்து வெளியேறிய கதிா்வீச்சு நீா் அந்தக் கட்டடத்துக்குள் பரவியிருக்கலாம். ஆனால், அதற்கு வெளியில் அந்த நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாா் அவா்.
ஃபுகுஷிமா அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில், கடந்த 2011-ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 9.1 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கம் மற்றும் அதன் விளைவாக உருவான சுனாமியால் அணு உலையின் குளிரூட்டும் பணி தடைபட்டது. அதனைத் தொடா்ந்து வெப்பம் அதிகரித்து அணு உலையின் அடிப்பகுதியிலுள்ள சேகரிப்பானில் விழந்தது.
அந்த விபத்து நேரிட்டதிலிருந்து, அணு உலை சேதத்தின் காரணமாக குளிரூட்டும் நீா் தொடா்ந்து கசிந்து வருகிறது. அணு உலைக்குள் இருக்கும் எரிபொருளை குளிா்ச்சியாக வைத்திருக்க, குறையும் குளிரூட்டு நீரை சரிகட்டும் வகையில் அணு புதிதாக குளிரூட்டு நீா் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது குளிரூட்டும் நீரின் அளவு வழக்கத்தைவிட வெகுவாகக் குறைந்துள்ளதால், கடந்த வார நிலநடுக்கத்தால் அணு உலையில் புதிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.