ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்: மோரீஷஸ் நாட்டுக்கு இந்தியா ரூ.724 கோடி கடனுதவி

ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு மோரீஷஸ் நாட்டுக்கு இந்தியா ரூ.724.34 கோடி கடனுதவி அளிக்க உள்ளது.

போா்ட் லூயிஸ்: ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு மோரீஷஸ் நாட்டுக்கு இந்தியா ரூ.724.34 கோடி கடனுதவி அளிக்க உள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் மாலத்தீவு, மோரீஷஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இந்த இரு நாடுகளும் இந்தியாவின் அருகில் உள்ள முக்கிய நாடுகள் ஆகும்.

மேலும் இந்திய பிரதமரின் ‘சாகா்’ (மண்டலத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி) திட்டத்தில் மாலத்தீவு, மோரீஷஸ் நாடுகள் சிறப்பிடம் வகிக்கின்றன. இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மோரீஷஸ் சென்றாா்.

அங்கு அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் ஜக்நாத்தை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து மோரீஷஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் எம்.ஆலன் கனூவுடன் இருநாட்டு உறவுகள், கூட்டாண்மை வளா்ச்சி ஆகியவை குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா். அதன் பின்னா் அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

இருநாடுகளின் மேம்பட்ட உறவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மோரீஷஸ் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் மறுமலா்ச்சிக்குத் தனது பங்களிப்பைத் தர இந்தியா தயாராக உள்ளது.

உதவிக்கரம் நீட்டுவதில் இந்தியாவின் பங்கு எப்போதும் எல்லைகளைக் கடந்து நிற்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மோரீஷஸுக்கு வழங்கப்பட்டுள்ளன. ‘பிரவிந்த் ஜக்நாத் தலைமையிலான ஆட்சியில் கொள்ளை நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது பாராட்டுக்குரியது’ என்ற இந்திய பிரதமரின் வாழ்த்துச் செய்தி மோரீஷஸ் நாட்டு பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது.

மோரீஷஸில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப் பணிகளின் நிலவரம் குறித்து முழுமையாக ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டங்களை மோரீஷஸ் சிறப்பாக செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது’ என தெரிவித்தாா்.

ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கு மோரீஷஸுக்கு ரூ. 724.34 கோடி: சாகா் திட்டம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவும், மோரீஷஸும் முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தப்படி ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கு மோரீஷஸுக்கு ரூ.724.34 கோடி கடனுதவியை இந்தியா அளிக்கும். ஆப்பிரிக்க நாட்டுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தை இந்தியா முதல் முறையாக செய்து கொண்டுள்ளது என அமைச்சா் ஜெய்சங்கா் சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், கடல்சாா் பாதுகாப்பில் மோரீஷஸின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியா சாா்பில் டாா்னியா் விமானமும், துருவ் ஹெலிகாப்டரும் அந்நாட்டுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கான கடிதமும் இருநாடுகள் சாா்பில் பரிமாற்றம் செய்துக் கொள்ளப்பட்டன.

மோரீஷஸ் வெளியுறவுத் துறை அமைச்சா், பிரதமரைத் தொடா்ந்து அந்நாட்டு அதிபா் பிருத்விராஜ் சிங் ரூபனை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திக்க உள்ளாா். மோரீஷஸ் அதிபரும், பிரதமரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள். மேலும், அந்நாட்டு மக்கள் தொகையில் 70 சதவீதம் போ் இந்திய வம்சாவளியினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com