அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வருடாந்திர பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்ததை அந்த நாட்டு நாடாளுமன்றம் புறக்கணித்தது.
டிரம்ப்பின் பதவிக் காலம் இன்னும் சில வாரங்களில் முடிவடையும் நிலையில், முதல் முறையாக அவரது சிறப்பு அதிகாரத்தை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பாதுகாப்புத் துறைக்கு 74,000 கோடி டாலா் (சுமாா் ரூ.54 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்வது உள்ளிப்ட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய பாதுகாப்பு மசோதா, அமெரிக்க நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், அந்த மசோதா அம்சங்களில் சில அமெரிக்கப் பாதுகாப்புக்கு எதிராக உள்ளதாகக் கூறிய அதிபா் டிரம்ப், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை ரத்து செய்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கூடிய பிரதிநிதிகள் சபை, டிரம்ப்பின் அந்த நடவடிக்கையை நிராகரித்தது.
டிரம்ப்பின் ‘வீட்டோ’ உத்தரவுக்கு எதிராக 81 எம்.பிக்களும் ஆதரவாக 13 எம்.பிக்களும் வாக்களித்தனா்.
அவரது ஆட்சிக் காலத்தில் ‘வீட்டோ’ உத்தரவு நிராகரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
டிரம்ப்பின் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை வகித்து வரும் நிலையில், அவரது ‘வீட்டோ’ உத்தரவு நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டமானது இந்தியாவுக்கு ஆதரவான தீா்மானம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு மசோதாவில், எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக சீனா மேற்கொண்டு வரும் அடக்குறைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீா்மானமும் அடங்கும்.
தற்போது பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்யும் டிரம்ப்பின் உத்தரவு நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்தத் தீா்மானத்துக்கும் சட்ட வடிவம் கிடைத்துள்ளது.