ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,246 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 518 பேர் பலியாகினர்.
ரஷியாவில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் புதிதாக 24,246 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 32,84,384 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,842 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 518 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 59,506 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 26,62,668 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,62,210 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.