கரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சீனா செல்ல இருந்த உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழுவுக்கு சீன அரசு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு அந்நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில் கரோனா தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கொண்ட ஆய்வுக் குழு தயாராகி வந்தது. எனினும் சீனா அரசின் அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “சீனா செல்வதற்கான அனுமதியை அந்நாடு அரசு இன்னும் உறுதி செய்யவில்லை. இது மிகுந்த ஏமாற்றமளிப்பதாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்தி வருவதாக சீனா உறுதி தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.