அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பாக அவரது வலைதளக் கணக்கின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூகுள் நிறுவன ஊழியர்களின் தொழிற்சங்கம் கண்டித்துள்ளது.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்று வந்தது.
அப்போது அமெரிக்க அதிபரின் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முறியடிக்கும் முயற்சியாக, புதன்கிழமை காலை டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர்.
அதனைத் தொடர்ந்து வன்முறையைத் தூண்டுதல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவலை தொடர்ச்சியாகப் பரப்பியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் சுட்டுரை, முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.
இந்நிலையில் டிரம்பின் வெறுக்கத்தக்க பேச்சின் மீது யூடியூப் நிறுவனம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என கூகுள் நிறுவன ஆல்பாபெட் தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
டிரம்பின் யூடியூப் கணக்கை நீக்காமல் ஒரே ஒரு காணொலியை மட்டும் நீக்கியதாக குற்றம்சாட்டிய தொழிற்சங்க ஊழியர்கள் இதுகுறித்து யூடியூப் நிறுவனம் உரிய பதிலை வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் வன்முறை மற்றும் வெறுப்பை தூண்டும் சக்திகளுக்கு உதவிகரமாக யூடியூப் செயல்படுவதை ஆல்பாபெட் தொழிற்சங்கம் கண்டித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாகக் கூறும் விடியோவை நீக்க யூடியூப் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.