கரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசியை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ புதன்கிழமை செலுத்திக்கொண்டார்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைஸா், மாடா்னா நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ரஷியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.
இந்த சூழலில் பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்தோனேசியாவில் சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
அதன்படி தடுப்பூசி குறித்த மக்களின் அச்சங்களைப் போக்கும் விதமாக புதன்கிழமை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முதலாவதாக கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து ராணுவ உயர் அதிகாரிகள், காவல்துறை மற்றும் மருத்துவ அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பிப்ரவரி மாதத்திற்குள் கிட்டத்தட்ட 15 லட்சம் மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இந்தோனேசியா நோக்கமாகக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
“கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் இந்தோனேசிய மக்கள் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இது பொருளாதார முன்னேற்றத்தை துரிதப்படுத்தவும் உதவும்” என அதிபர் விடோடோ தெரிவித்தார்.
இந்தோனேசிய மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.