ஜெனீவா: முதல் முறையாக பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா, சுமார் 60 நாடுகளுக்குப் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், புதிய வகை கரோனா வேகமாகப் பரவி வருவது உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி திட்டம் முழுமையாக முன்னெடுக்கப்படும்வரை, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற புதிய வகை கரோனா வைரஸ் தென்னாப்ரிக்காவிலும் கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு, தற்போது 23 நாடுகள் மற்றும் தீவுப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 40 லட்சம் பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவுக்கு இதே ஒரு வாரத்தில் 93 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே, உலகம் முழுவதும் சுமார் 60 நாடுகளில் புதிய வகை கரோனா பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.